court

img

ஆதார் விவரத்தை பாஜக திருடிய விவகாரம்..... புதுச்சேரி தேர்தல் நடக்குமா?

சென்னை:
தமிழகத்துடன் புதுச்சேரி மாநிலத்திற்கும் வருகிற ஏப்ரல் 6 ஆம் தே ஒரே கட்டமாக சட்டமன்றபொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவினர் புதுச்சேரியில் தொகுதி வாரியாக ‘வாட்ஸ் ஆப் குரூப்களை’ தொடங்கி தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஆதார் ஆணையத்திலிருந்து வாக்காளர்களின் செல்போன் எண்களை பெற்றுள்ள பாஜகவினர், மோடி அரசுக்கும் பாஜகவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த பிரச்சாரத்திற்கு ஆதார் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட தனிநபரின் செல்போன்  எண் பாஜகவுக்கு கிடைத்தது  எப்படி? என்றும் இதற்கு தடைவிதிக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் ஆனந்த் பொதுநல வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. முதல் நாள் விசாரணையின் போது இதுகுறித்த பதில் அளிக்க ஒரு நாள் அவகாசம் வழங்கினர்.

இதனையடுத்து, வெள்ளிக்கிழமை (மார்ச்16) அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம், புதுச்சேரி அரசு, ஆதார் ஆணையம் தரப்பில் அதிகாரிகளும் வழக்கறிஞர்களும் ஆஜராகினர். பாஜக தரப்பில் ஒருவரும் வரவில்லை.விசாரணை துவங்கியதும் தேர்தல் ஆணையம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படடது. அதில், குறுந்தகவல் அனுப்பிய பாஜக தரப்பு முறைப்படி தேர்தல் ஆணையத்திடம் அனுமதிபெறவில்லை  என்றும் இதுகுறித்து முழுமையாக விசாரணை செய்யவும், தேர்தல் ஆணையத்திடம் எழுத்துபூர்வமாக அறிக்கை பெறவும் கூடுதல் அவகாசம் தேவை” என்றார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், “அப்படியென்றால், விசாரணை முடியும் வரைக்கும் தேர்தலை தள்ளிவைக்கலாம்” என்றனர்.அப்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்தலை தள்ளி வைத்தால், மனுதாரின் புகாரில் உண்மை தன்மையில்லை என்றால் அனைத்தும் வீணாகும் என்றார். மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள்,“புகார் அளித்தவரின் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் என்ன செய்வது என்று பதில் கேள்வி எழுப்பியதோடு அனைத்து தரப்பையும் வாயடைத்தனர்.
பாதிக்கப்பட்ட  ஆனந்த் தரப்பில் இருந்து நேரிடையாக எழுத்து மூலம் இதுவரைக்கும் புகார் வரவில்லை என்று ஆதார் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,“எதையாவது சொல்லி தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்க வேண்டாம்” என்றனர்.

மேலும், இதுவரைக்கும் நடந்துள்ள நிகழ்ச்சிகளை உற்று நோக்கும்போது இந்த வழக்கில் 6வது நபராக சேர்க்கப்பட்டிருக்கும் பாஜகவும், 7வது நபரும் தனித் தனியானவர்கள் என்பதை நம்பமுடியவில்லை என்றும் ஆதார் ஆணையம் தனி அமைப்பு என்கிற நம்பகத் தன்மையும் குறைந்துள்ளது என்றும் கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை 31 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.புதுச்சேரி தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்பது அன்றைக்குதான் தெரிய வரும்.

;